வன்மத்தை வைத்து அரசியல் செய்தால் டி.டி.வி. தினகரன் ஒரு கவுன்சிலராகக் கூட வர முடியாது: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
சென்னை: டிடிவி தினகரனால் கவுன்சிலராக கூட முடியாது என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார். கோடநாட்டில் ஆவணங்களை தேடிச் சென்றபோது கொலைகள் நடந்ததாக டிடிவி தினகரன் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்; ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை கைப்பற்ற டி.டி.வி. தினகரன் முயற்சித்தார், ஆனால் அது முடியவில்லை. அதிமுகவை அபகரிக்க முடியாததால் ஏற்பட்ட விரக்தியில் கோடநாடு கொலை குறித்து டிடிவி பேசி வருகிறார்.
டி.டி.வி. தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார். டி.டி.வி. தினகரனுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை; பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்று என்கிறார். ஆயிரக்கணக்கானவர்களை டிடிவி தினகரன் அனாதை ஆக்கிவிட்டார். டிடிவியை நம்பிச் சென்ற 18 எம்எல்ஏக்கள் அரசியல் அனாதைகள் ஆகிவிட்டனர். செல்வாக்கோடு இருந்த டிடிவி தினகரன், ஜெயலலிதா இறந்த பிறகு அனைத்தையும் இழந்து நிற்கிறார். நானும் ரவுடிதான் என வடிவேல் செல்வதுபோல்தான் தான் சிம்ம சொப்பனம் என டிடிவி நினைக்கிறார்.
டிடிவி தினகரன் 23ம் புலிகேசியாகிவிட்டார். முதலமைச்சராக இருக்கும்போது ஜெயலலிதா சிறைக்கு சென்றார், அதற்கு யார் காரணம்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உரிய சிகிச்சை அளித்தீர்களா? தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தால் நாங்களும் செய்வோம். வன்மத்தை வைத்து அரசியல் செய்தால் டி.டி.வி. தினகரன் ஒரு கவுன்சிலராகக் கூட வர முடியாது. தை பிறந்தால் வழி பிறக்கும்; மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறினார்.

