கோபி: டிடிவி மற்றும் ஓபிஎஸ் அணியினரை தொடர்ந்து, சசிகலா ஆதரவாளர்கள் நேற்று செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பு கோரிக்கையை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி உள்ள செங்கோட்டையனை கடந்த 12 நாட்களாக ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா ஆதரவாளர்கள் (புரட்சித்தாய் சின்னம்மா பேரவை) சார்பில் நேற்று முதல் முறையாக செங்கோட்டையனை சந்தித்து ஒருங்கிணைப்பு கோரிக்கை விடுத்ததற்காக நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில தலைவர் ஜெயபாண்டி, ‘‘செங்கோட்டையன் எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதை தான் அடிப்படை தொண்டர்கள் விரும்புகிறோம். அதிமுகவை பிளவுபடுத்தி அழிக்கும் முயற்சியில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
கடைக்கோடி தொண்டனின் விருப்பத்தை செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம். விரைவில் நல்ல முடிவு வரும் என்று தெரிவித்தார். அதேபோன்று கரூர், திருச்சி மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முசிறி முன்னாள் எம்எல்ஏ ரத்தினவேல், ‘‘இன்னும் ஒரு வாரத்தில் காலம் கனியும்.
டெல்லியில் முகத்தை மூடிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வெளியே காாில் வந்துள்ளார். நல்ல நிகழ்வு நடந்திருந்தால் கையை அசைத்து மகிழ்ச்சியாக வந்திருப்பார். மோசமான நிகழ்வு நடந்ததால் முகத்தை மூடிக்கொண்டு வந்துள்ளார். நிச்சயம் அமித்ஷா- எடப்பாடி சந்திப்பு தோல்வியில் முடிந்திருக்கும்’’ என்றார். இதுவரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மட்டுமே செங்கோட்டையனை சந்தித்த நிலையில் தற்போது, சசிகலா பேரவை சார்பிலும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.