Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த டி.டி.எப். வாசன்

மதுரை: செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த மாதம் 15ந் தேதி டிடிஎப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார்.

அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப். வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த 31ந் தேதி மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப். வாசன் கையெழுத்திட்டார்.

அப்போது வழக்கு விசாரணைக்காக டி.டி.எப். வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நேரில் நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து கடந்த 3ம் தேதி மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரான டி.டி.எப். வாசன், தனது செல்போனை ஒப்படைக்க 2 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில், டி.டி.எப் வாசன் தனது செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்று ஒப்படைத்தார்.