Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை: குடியரசு கட்சி தலைவர் எதிர்ப்பு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது மேலும் 25% கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கூடுதலாக 2ம் நிலை தடைகள் விதிக்கப்படலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்பின் நடவடிக்கைக்கு அவர் சார்ந்த குடியரசு கட்சியை சேர்ந்த தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே 25 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் மேலும் 25% கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவில் நேற்றிரவு டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார். இந்த உத்தரவுக்கு பிறகு, இந்திய பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் இன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்கு பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்திய பொருட்களுக்கும் பொருந்தும்.இந்த நடவடிக்கையை அநியாயமானது, நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தங்கள் தேசிய நலன்களை பாதுகாக்க இந்தியா “தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “அமெரிக்கா சமீப நாட்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறிவைத்துள்ளது. எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். எங்கள் இறக்குமதிகள் சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டவை. 1.4 பில்லியன் இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களை பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லி, ரஷ்ய எண்ணெய்க்கான இறக்குமதியை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க மாஸ்கோ சென்றுள்ளார். அமெரிக்கா-இந்தியா உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க அச்சுறுத்துகிறது. இந்தியா- ரஷ்ய எண்ணெய் கொள்முதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது, ரஷ்ய எண்ணெயை பிற நாடுகளும் வாங்குகிறது.

ஆனால் அந்த நாடுகள் மீது நடவடிக்கை எடுக்காம இந்தியா மட்டுமே ஏன் தனியாக குறிவைத்து தாக்கப்படுகிறது என்று நிருபர்கள் கேட்டபோது, ‘நான் அறிவித்து 8 மணிநேரம்தான் ஆகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இன்னும் நிறைய பார்க்க போகிறீர்கள். 2ம் நிலை தடைகள் அதிகம் வர போகின்றன’ என்றார். மேலும், இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வரிகளை போலவே சீனா மீது கூடுதல் வரிகள் விதிக்க திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்டதற்கு, “நடக்கலாம். நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தது. நடக்கலாம்’ என்றார்.

எதிர்ப்பு

இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து அதற்கான உத்தரவில் உடனடியாக கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கைக்கு அவர் சார்ந்த குடியரசு கட்சியை சேர்ந்த தலைவரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷ்யா, ஈரானிடம் இருந்து அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக சீனா மீதான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைத்துவிட்டு இந்தியா மீது மட்டும் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவை பகைத்து கொண்டு சீனாவுக்கு சலுகை வழங்க கூடாது. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டுமே தவிர சிதைக்க கூடாது’ என்று கூறியுள்ளார்.

காய்ச்சல் மருந்துக்கு கூட திண்டாடப்போகும் அமெரிக்கா

அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவில் சுகாதாரத்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மருந்துகள் ஆண்டுதோறும் 300 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதோடு அங்கே பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் ஒன்று இந்திய மருந்து. தற்போது இதன் ஏற்றுமதி பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அங்கே மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மருந்துக்கு கூட மக்கள் அங்கே திண்டாடும் நிலை ஏற்படும்.