Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேட்டோ நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்; ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள்: சீனா மீது 50% முதல் 100% வரி போடுங்கள்

பாஸ்கிங் ரிட்ஜ்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும், சீனா மீது 50 % முதல் 100% வரி விதித்தால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று தனது சமூக ஊடக பதிவில், ‘‘ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் நேட்டோ நாடுகளின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த அமைப்பில் உள்ள சில நாடுகள் ரஷ்யாவிடம் இன்னமும் கச்சா எண்ணெய் வாங்குவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ரஷ்யா உங்கள் பேச்சை கேட்பதையும், உங்கள் நிலைப்பாடு, பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது.

எனவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அனைத்து நேட்டோ நாடுகளும் நிறுத்த வேண்டும். ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது 50 % முதல் 100 % வரையிலும் வரி விதிக்க வேண்டும். அப்போது மட்டுமே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்’’ என கூறி உள்ளார்.

32 நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில் துருக்கி, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் உக்ரைன் போருக்கு பிறகும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரி விதிக்க வேண்டுமென ஜி7 நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளனர். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உண்மையிலேயே எண்ணினால், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதில் அமெரிக்காவுடன் இணைய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், இந்தியா, சீனா உட்பட எந்த நாடுகளின் பெயரையும் அமெரிக்கா வெளிப்படையாக குறிப்பிடவில்லை.