திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சிக்கினார். இது தொடர்பாக சிறை காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவர் மீது கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜேந்திரன் 2023ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் ேததி காலை 6 மணிக்கு மத்திய சிறையின் முகப்பு பகுதியில் உள்ள சிறை பஜாரில் பணியாற்றுவதற்காக ராஜேந்திரன் உள்ளிட்ட 5 கைதிகளை சிறைக்காவலர் அழைத்து சென்றார். அங்கு பணி முடிந்து காலை 8.30 மணியளவில் சிறைக்கு கைதிகள் திரும்பினர். அப்போது சோதனை நடத்தியபோது ராஜேந்திரனை காணவில்லை. இதையடுத்து சிறைச்சாலை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் தப்பி ஓடியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ராஜேந்திரனை தேடினர். இந்நிலையில் திருவெறும்பூர் அடுத்த சின்னசூரியூர் குளக்கரையில் பதுங்கியிருந்த ராஜேந்திரனை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சிறை தலைமை காவலர் ஜஸ்டின்ராஜ், சிறை காவலர்கள் தினேஷ், சண்முகராஜா ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.