தீர்ப்பாயங்கள் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடும் குற்றச்சாட்டு: உச்ச நீதிமன்ற விசாரணையில் பரபரப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒரே மாதிரியான நியமனங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்தது மட்டுமில்லாமல், ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதில், ‘‘இந்த வழக்கில் மனுதார்கள் தரப்பிலான வாதங்கள் முடிந்து விட்டது. இதுபோன்ற நிலையில் இவ்வாறு கோரிக்கை வைத்தால் கண்டிப்பாக அதனை ஏற்க முடியாது. எனது தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று ஒன்றிய அரசு விரும்புகிறது. அதனால் தான் நள்ளிரவில் வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்’’ என்றார்.
