Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐ.டி.ஐ.யில் சேர சிறப்பு முகாம்: ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்பட்ட ஐ.டி.ஐ.யில் சேருவதற்கான முகாமில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். நான் முதல்வன் திட்டத்தின்படி, பழங்குடியின நல உண்டி உறைவிடம் மற்றும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அனைவரையும் கண்டறிந்து 100 சதவீத உயர்கல்வியை உறுதிப்படுத்திடும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில், திருவண்ணாமலை, ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், சேலம் கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், நாமக்கல் கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கோவை ஆனைக்கட்டி அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், நீலகிரி கூடலூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

இதுகுறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது: பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களும், பள்ளிப்படிப்பை தொடரமுடியால் இருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பழங்குடியினர் நலத்துறை மூலம் தொழிற்பயிற்சி நிறுவனங்களிடம் பேசி மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்தோம். முதற்கட்டமாக நடந்த முகாமில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதற்காக உண்டி உறைவிடம் மற்றும் ஏகலைவா மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் 58 ஆசிரியர்களை தேர்வு செய்தோம். அதன்படி, பள்ளிப்படிப்பை தொடரமுடியாமல் இருந்த மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சி பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்த பேட்ஜ்களுக்கான மாணவர்களை தேர்வு செய்வதில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.