போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு: அண்ணா சாலை போலீசார் நடவடிக்கை
சென்னை:அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான அண்ணாசாலையில் நேற்று மதியம் நடந்த சம்பவம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் மதியம் 1.40 மணி அளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரே போக்குவரத்து காவலர் பிரபாகரன் என்பவர் பணியில் இருந்தார். அவர் நான்கு சக்கர வாகனத்தில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாருக்கு சொந்தமான வாகனம் ஒன்று அண்ணாசாலையில் தவறாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், போக்குவரத்து காவலர் பிரபாகரன் அந்த வண்டியை அங்கிருந்து எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
காவலர் வண்டியை நகர்த்தச் சொன்னதும், எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அவருடன் இருந்த ஆதரவாளர்கள் போக்குவரத்து காவலர் பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார், போக்குவரத்து காவலர் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் பேசி, அவரை கையால் தாக்கினார்.சீருடையில் இருந்த காவலரை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த துணை ஆணையர், உதவி ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியில் சிசிடிவி கேமரா ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை போலீசார் எம்எல்ஏ ராஜ்குமார் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் ஏற்படுத்துதல் காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து எம்எல்ஏ ராஜகுமார் கூறுகையில், ‘‘அங்கு நடந்தவற்றை அரசியல் ஆக்குகின்றனர். நான் காவலரைத் தாக்குமளவுக்குக் குணம் கொண்டவன் அல்ல, அது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். நான் அவரை அடித்தேன் என்றால் அதற்கான ஆதாரம் உள்ளதா? என் மீது தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கட்டும்’’ என்றார்.