விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் கொடுக்கல், வாங்கல் விவகாரம் தொடர்பாக இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது இந்த காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றியவருக்கும், இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டில் தனிமையில் ஒன்றாக இருந்த இளம்பெண்ணையும், ஏட்டுவையும் அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்டோர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து ஏட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரின் டூவீலரை அடித்து சேதப்படுத்தினர். தகவலறிந்த ஆமத்தூர் போலீசார், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று, டூவீலரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக இளம்பெண்ணின் கணவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஏட்டுவை, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். இதேபோல் விருதுநகரில் ஒரு காவல் நிலையத்தில் டிரைவராக பணியாற்றும் போலீஸ் ஒருவருக்கும், மற்றொரு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. பின்னர் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்து நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


