பயிற்சி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: சட்டப்போராட்ட குழு வேண்டுகோள்
சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: சாலை விபத்தில் காயமடைந்த பாலமுருகன் என்பவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த பாலமுருகனின் நண்பர்கள், பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்களிடம் தகாத வார்த்தையிலும், ஒருமை பேசியிலும் பேசி உள்ளனர். வாக்குவாதம் நீடித்த நிலையில், மருத்துவர்களை தாக்கியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். பயிற்சி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொள்கிறோம்.
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் என பெருமையாக தெரிவிக்கின்றனர். ஆனால் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கூட இல்லை என்பது தான் வேதனையாக உள்ளது. எனவே தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மருத்துவர்களை பாதுகாப்பதிலும் முன்மாதிரி மாநிலமாக திகழும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.