Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது

திருவள்ளூர்: சென்னை மணலி ஐஓசியில் இருந்து 50 டேங்கர்களில் டீசல் நிரப்பி கொண்டு ஒரு சரக்கு ரயில் மைசூருக்கு நேற்று அதிகாலை புறப்பட்டது. அந்த ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்ததும் தடம் புரண்டது. சில விநாடிகளில் அடுத்தடுத்த சில டேங்கர்களும் கவிழ்ந்தன. இதில் ஒரு டேங்கரில் இருந்த டீசலில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாகவும், டீசல் என்பதாலும் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் மளமளவென தீ பரவியது. குபுகுபுவென அப்பகுதி முழுவதும் கரும்புகை வெளியேறியது. இதனால் சுற்றுவட்டார மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இதில் ரூ.12 கோடி மதிப்பிலான 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் டீசல்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அவ்வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் உட்பட சென்னை- அரக்ேகாணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்ததில், அந்த வழித்தடத்தில் உள்ள 4 தண்டவாளங்களும் சேதமடைந்தன. மின் கம்பிகளும் தீயில் எரிந்தன. தீப்பிடித்த டேங்கர்களும் தடம்புரண்டு, ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து அங்கு சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன. முதற்கட்டமாக, மின்சார ரயில்கள் ஒரு தண்டவாளத்தில் சென்று திரும்பும் வகையில் தண்டவாள பராமரிப்பு மற்றும் மின் இணைப்பு பணியை ரயில்வே ஊழியர்கள் செய்தனர்.

இந்நிலையில், தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 17 மணி நேரத்திற்கு பின்பு இன்று அதிகாலை சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் சென்னை சென்டரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, ஆலப்புழா, பாலக்காடு உள்ளிட்ட விரைவு ரயில்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன. மேலும் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மார்க்கத்திலும் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்த சரக்கு டேங்கர் ரயில் பெட்டிகள் ராட்சச கிரேன் மூலம் அகற்றும் பணி நடந்து முடிந்து இன்று அதிகாலை முதல் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் ரயில்கள் செல்லும் நேரத்தில் சற்று காலதாமதம் ஏற்படும் எனவும், எந்த ரயில்களும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 26 மணி நேரமாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் இருப்பு பாதையும் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்ததாக ரயில்வே போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.