சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி: அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 15 பேர், மார்க்கோனஹள்ளி அணைப் பகுதிக்கு நேற்று முன் தினம் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள நீரில் இறங்கியுள்ளனர். அப்போது, அணையின் மதகுகளில் இருந்து திடீரென அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டதால், சீறிப் பாய்ந்த வெள்ளத்தில் நீரில் இருந்த 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், நவாஸ் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் நான்கு பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.