திருமலை: இன்று சந்திர கிரகணம் பிடிப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் நடை அடைக்கப்படுகிறது. ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. சந்திர கிரகணம் இன்று இரவு 9:50 மணி முதல் நாளை அதிகாலை 1:31 மணி வரை கிரகணம் நீடிக்கும். எனவே திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று பிற்பகல் 3:30 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை மூடப்படும். சந்திர கிரகணத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு இன்று பிற்பகல் 3:30 மணிக்கு கோயில் மூடப்படும். கிரகணம் முடிந்த பின்னர் கோயில் கதவுகள் திறந்து சுத்தம் செய்து கிரகண தோஷ நிவாரண பூஜை, நித்ய பூஜை செய்யப்பட்ட பிறகு செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோயில் கதவுகள் மீண்டும் திறக்கப்படும்.
பக்தர்களுக்கான சுவாமி தரிசனத்திற்கு நாளை காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் அனுமதிக்கப்படும். சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து இன்று ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் அன்னபிரசாத விநியோகம், தரிகொண்ட அன்னபிரசாத வளாகம், வைகுண்டம் காம்பளக்ஸ் அறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இன்று பிற்பகல் 3 மணியுடன் அன்னப்பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படும். இருப்பினும் பக்தர்களுக்கு 30,000 அன்னபிரசாதப் பாக்கெட்களில் விநியோகிக்கப்படும்.