Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளிச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்: விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளிச்சந்தையில் வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு ஜவுளிச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெரிய வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்து வருகின்றனர். அனைத்து வகையான ஜவுளியும் ஒரே இடத்தில் சிறிது குறைவான விலையில் கிடைப்பதால் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து நடுத்தர, குறு, சிறு வியாபாரிகள் வந்து ஜவுளி கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். இந்நிலையில் நேற்று இரவு கூடிய சந்தையிலும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கடைகளை அமைத்து இருந்தனர். ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் குவிந்ததால் ஜவுளிச்சந்தை களைக்கட்டியது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 35 நாட்களே இருப்பதால், வியாபாரிகள் ஜவுளியை மொத்தமாக கொள்முதல் செய்தனர். இதனால், கடந்த வாரங்களை காட்டிலும் இந்த வாரம் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இனிவரும் வாரங்களிலும் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடையும். பண்டிகை காலம் என்பதால், புதிய டிசைன் ஆடைகள் சந்தைக்கு வந்துள்ளன. இதனால், சந்தையில் ஆடைகளை வாங்குவதற்காக பொதுமக்களும் திரண்டு வந்தனர். மொத்த வியாபாரத்தை போலவே சில்லறை விற்பனையும் நடந்தது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.