தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

