Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை கன்னியாகுமரி கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது: சிறு சுத்தியல் விழுந்தது பற்றி கலெக்டர் விளக்கம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது, சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைத்து தமிழ்நாடு அரசின் சார்பில் கண்ணாடி இழை தரைதள பாலம் கட்டப்பட்டு, சுமார் 17.50 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர். இக்கண்ணாடி பாலத்தினை தகுதியான வல்லுநர்களை கொண்டு, சிறப்பாக பாரமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மூலம் பாலத்தின் மேல்பகுதியில் பெயின்ட் அடிக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக பணியாளர் கையில் இருந்த ஒரு சிறிய சுத்தியல் 7 மீட்டர் உயரத்திலிருந்து 6 வது கண்ணாடியின் மேல் விழுந்து முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. இதன் பிறகு கண்ணாடி தயாரிக்கும் நிறுவனமான சென்னை செயின்ட் கோபைனில் கண்ணாடி புதிதாக செய்வதற்கு ஒப்பந்ததாரர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கண்ணாடி மொத்தம் 4 அடுக்குகளாக உள்ளதால், உரிய பாதுகாப்பு நடைமுறையில் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது.

அதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முன்னிலையில் செப்டம்பர் 4ம் தேதி கண்ணாடி சோதிக்கப்பட்டது. இக்கண்ணாடியை பாலத்தில் பொருத்துவதற்கு 3 பேஸ் மின் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்ததால், தற்போது ஜெனரெட்டர் மூலம், கண்ணாடி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியானது இரு தினங்களில் நிறைவுபெறும். மேலும் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இன்று வரை சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தினை எவ்வித சிரமுமின்றி பார்வையிட்டு வந்துள்ளனர். எனவே சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கண்ணாடி பாலத்தினை பார்வையிடலாம் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.