Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வார விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: களைகட்டிய கன்னியாகுமரி

சேலம்: வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏற்காடு மற்றும் ஒகேனக்கல், கன்னியாகுமரியில் இன்று குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு வார விடுமுறை தினமான இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்திருந்தனர். அண்ணா பூங்காவில் குவிந்த அவர்கள் பலவண்ண மலர்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து ஏற்காடு ஏரி பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஜெண்ட்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் மலைக்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். படகு இல்லத்தில் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து ஏரியில் குடும்பத்தினருடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேட்டூர் அணை பூங்காவுக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அங்குள்ள அணை பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடி பொழுதை போக்கினர். இடைப்பாடி அருகே பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள், விசைப்படகில் உற்சாகமாக சவாரி சென்று காவிரியின் அழகை ரசித்தனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இன்று வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அங்குள்ள மெயின் அருவியில் மிதமாக கொட்டும் நிலையில் அருவி மற்றும் ஆற்றில் குளித்தும், பரிசல் சவாரி சென்றும் மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக,அவ்வப்போது மழையுடன் சில்லென்ற குளிர் காற்று வீசி வருகிறது. வார விடுமுறையையொட்டி இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி களைகட்டியது;

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அவர்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டு காலை சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர். மேலும் கடலில் புனித நீராடி, பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.மேலும் காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். தொடர்ந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் கடலில் பயணித்து விவேகானந்தர் மண்டபம் சென்றனர். அதுபோல கண்ணாடி பாலம் மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.