Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கொடிவேரி அணையில் தஞ்சமடைந்த சுற்றுலா பயணிகள்

*குளித்தும், பரிசலில் பயணம் செய்தும் உற்சாகம்

கோபி : கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.

சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பக குளிக்கு முடியும் என்பதாலும் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகளவில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி பள்ளி திறக்கப்பட்ட நிலையில் நேற்று கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. கூட்டம் இல்லாத நிலையில் அணையில் இருந்து அருவி போல் கொட்டிய தண்ணீர் இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அதே போன்று சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் பெண்களும் உற்சாகமாக விளையாடியும், கடற்கரை போன்ற மணல் பரப்பில் அமர்ந்தும், அணையின் மேல் பகுதியில் குடும்பம் குடும்பமாக பரிசல் பயணம் செய்தும் உற்சாகமாக விடுமுறையை களித்தனர்.

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது.இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடிவேரி அணையில் தஞ்சம் புகுந்த சுற்றுலா பயணிகள், அருவி போல் கொட்டும் தண்ணீரில் இருந்து வெளியேற மனமில்லாமல் உற்சாகத்துடன் விடுமுறையை களித்தனர்.