Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடை மழை எதிரொலி: அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது

வேடசந்தூர்: கோடை மழை காரணமாக அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூரில் தக்காளிக்கு என தனிச்சந்தை உள்ளது. இங்கு எரியோடு, கல்பட்டி, அய்யலூர் வடமதுரை, கொம்பேறிபட்டி, பாகாநத்தம், வளவிசெட்டிபட்டி, குருந்தம்பட்டி, கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் தக்காளி திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகளவு தக்காளி பயிர் இடுவதால் அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து எப்போதும் சீரான நிலையில் இருக்கும். தினசரி 20 முதல் 35 டன் தக்காளி வரத்து அய்யலூர் தக்காளி சந்தையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அய்யலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகளின் தோட்டத்தில் விளைவிக்கப்படும் தக்காளிகள் அதிக சேதமடைந்துள்ளது. இதனால் போதிய வரத்து இல்லாமல் அய்யலூர் தக்காளி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்து (4 முதல் 5 டன் வரை) போதிலும் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.250ல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கோடை மழை பெய்ததில் தக்காளி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இன்னும் விளைச்சல் கணிசமாக உயர 15 நாட்கள் முதல் ஒரு மாத காலம் ஆகும். இவ்வாறு கூறினார்.