வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் அரசுக்கு ரூ.274 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய சாதனை!!
சென்னை: பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் ரூ.274 கோடி வருவாய் ஈட்டி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை, அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவார்கள். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாகவே அரசின் கருவூலத்துக்குத் தேவையான அதிக வரி வருவாய் கிடைக்கும். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி, முகூர்த்த நாள் என்பதால் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், " பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழும் 2025-26ஆம் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.இதற்கு முன்னதாக, கடந்த 30.04.2025 அன்று பதிவுத்துறையில் ஒரே நாளில் அரசுக்கு 5.272.32 வருவாய் ஈட்டப்பட்டது."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.