Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று சேலத்தில் நடைபெறும் விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3000 கோடி வங்கி கடன் இணைப்புகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: சேலத்தில் இன்று நடைபெறும் விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3000 கோடி வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார். மகளிரின் பொருளாதார சுயசார்பிற்காகவும், அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்திடும் வகையிலும், 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக சுய உதவிக் குழு இயக்கத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி, வங்கி கடன் இணைப்புகள், பூமாலை வணிக வளாகங்கள், மணிமேகலை விருதுகள் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரக பகுதிகளில் 3,38,985 சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1,47,671 சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களில் 55,45,043 உறுப்பினர்கள் உள்ளனர்.

2025-26ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, 3.9.2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 19 லட்சத்து 68 ஆயிரத்து 58 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 55 லட்சத்து 84 ஆயிரத்து 754 பேருக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும், சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளையும் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்குகின்றனர்.