சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56) உடல் நலக் குறைவால் காலமானார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றியவர். இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன் , இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும் பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.