சாலை, தெருக்களின் சாதி பெயர் மாற்றுவது குறித்து விவாதிக்க கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (11ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தெரு, சாலைகளின் சாதி பெயர்களை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நாளை) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.
இதில், அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று அத்தியாவசிய தேவைகளை தேர்வு செய்து கிராம சபையின் ஒப்புதலை பெறுதல், சாதிப் பெயர்கள் கொண்ட சிறிய கிராமங்கள், சாலைகள், தெருக்களின் பெயர்களை மாற்றுதல், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மைப் பாரத இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கலாம். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.