சென்னை: கோவையில் “தமிழ் கற்க முடியாதது வருத்தம்” என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; கோவைக்கு வருகை புரிந்து “தமிழ் கற்க முடியாதது வருத்தம்” என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் தெளிவாகச் சொல்ல விரும்புவது — தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல; ஆனால் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிக் கொண்டு, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதும், மாநிலத்திற்கு உரிய நிதியை மறுத்து வைப்பதும் தான் பெரிய பிரச்சனை.
ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் தமிழர்களைப் பற்றி அவமதிப்பாகப் பேசி வாக்குகள் கோரும் அரசியலும், தமிழ்நாட்டில் மக்களின் மனதைப் பிடிக்க “தமிழ் மீது பாசம்” என்ற மேடைப் பேச்சும் இரண்டும் ஒன்றல்ல. தமிழ் மொழியையும் தமிழர் உரிமையையும் மதிக்காத ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையே இந்த நாட்டின் நலனுக்கும், தமிழகத்தின் உரிய உரிமைகளுக்கும் தடையாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


