லண்டன்: இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. இதில் ஏராளமானோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். அந்த கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது எதிர்பாராத விதமாக பனிப்பாறையில் மோதியது. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை மையப்படுத்தி 1997ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கிடையில், அந்த கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. சுமார் ரூ.20 கோடிக்கு, அந்த கடிகாரம் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவு பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.



