சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வணிக வளாகம் கட்டுவதற்கு பதிலாக பக்தர்கள் வசதிக்காக கியூ காம்ப்ளக்ஸ் கட்ட உள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், கியூ காம்ப்ளக்ஸ் குறித்த தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நான்காம் பிரகாரத்தில் கியூ காம்ப்ளக்சும், பக்தர்கள் காத்திருப்பு கூடமும் கட்டப்பட்டு வருகிறது என்று கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். இவற்றை பார்வையிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலின் நான்காம் பிரகாரத்தில், சுற்றுச்சுவருக்கு மிக அருகில், கியூ காம்ப்ளக்சும், பக்தர்கள் காத்திருப்பு கூடமும் கட்டடுவதற்கான அவசியம் என்ன? இந்த கட்டுமானங்கள் சுற்றுச்சுவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும் வகையில் ஆவண ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும்.
அதுவரை நான்காம் பிரகாரத்தில் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் பக்தர்கள் காத்திருப்பு கூடம் மட்டுமல்லாமல், கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அக்டோபர் 5ம் தேதி கோயிலில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.