திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் நடந்த எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் பவனி வந்து அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி எவ்வித இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி கடந்த 3 நாட்களாக எல்லை தெய்வ வழிபாடு நடந்தது. அதன்படி, முதல் நாள் துர்க்கையம்மன் உற்சவமும், இரண்டாம் நாளான நேற்று முன்தினம் பிடாரியம்மன் உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, நேற்று இரவு விநாயகர் உற்சவம் நடந்தது.
அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் உடன் வலம் வந்தார். சுவாமி திருவீதி உலாவின்போது, விட்டு விட்டு லேசான மழை பெய்தது. ஆனாலும், மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



