திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரி முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொமில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி சி.இ.ஓ. அபூர்வா வினய்காந்த் சாவ்டா, தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியின் உதவியாளர் சின்ன அப்பன்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அஜய்குமார் சுகந்த் என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கி வந்த போலே பாபா நிறுவனத்திற்கு அஜய்குமார் சுகந்த், நெய்யில் கலப்படம் செய்வதற்காக மோன் கிரீஸ்ராய்ட்ஸ் மற்றும் அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை சப்ளை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அஜய்குமார் சுகுந்த்தை, சி.பி.ஐ. அதிகாரிகள் நெல்லூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 21ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

