Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குறித்த நேரத்துக்கு வந்தா வெய்ட் பண்ண வேணாம்... பக்தர்களுக்கு செயல் அதிகாரி அட்வைஸ்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க கூடாது என்பதற்காக சர்வ தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட், சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கான வரிசையில் வர வேண்டும். ஆனால் பல பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட மிகவும் முன்னதாகவே தரிசனத்திற்கான வரிசைக்கு வருவதால் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக நேரம் குறிப்பிடப்பட்டுள்ளபடி மட்டுமே பக்தர்கள் தரிசன வரிசையில் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இன்னும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வெகு சீக்கிரம் வந்து வரிசைக்கு அருகில் வெளியில் காத்திருந்து சிரமப்படுகின்றனர், எனவே பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கடைபிடித்தால் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து திருமலையில் உள்ள பக்தர்களின் தகவலுக்காக தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். இன்று முதல் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களிலும் பக்தர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படும். எனவே முன்கூட்டியே பக்தர்கள் வந்து வரிசையில் காத்திருக்காமல், திருப்பதியில் உள்ள உள்ளூர் கோயில்களுக்குச் செல்லலாம் அல்லது திருமலையில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.