திருமலை: திருப்பதி சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கிய நிலையில், மேலும் 3 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அலிபிரி சாலையில் பொதுமக்களையும், மாணவர்களையும் அச்சுறுத்தி வந்த சிறுத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் சிக்கியது.
இந்த சிறுத்தையை பாதுகாப்பாக கொண்டு சென்று மாமண்டூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை விட்டனர். இதனால் அப்பகுதியினர் நிம்மதியடைந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் மேலும் 3 சிறுத்தைகள் இந்த பகுதியில் சுற்றி வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மங்கலம் சாலையில் உள்ள டி-மார்ட்டுக்குப் பின்னால் உள்ள வனப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
இரவு 8.53 மணிக்கு சிறுத்தையின் நடமாட்டம் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வனத்துறையினர் தெரிவித்தபடி மேலும் 3 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.