திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான நெய்யில் கலப்படம் செய்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குழு விசாரித்து வந்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகரன், உத்தரகாண்ட்டை சேர்ந்த போலாபாபா டெய்ரி நிறுவனத்தை சேர்ந்த பிபின் ஜெயின், பொமில் ெஜயின், திருப்பதி அடுத்த ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி தலைமை அதிகாரி அபூர்வா வினய்காந்த் சாவ்டா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரும் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் 4 பேரையும் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு 5 நாள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். அதில் அபூர்வா வினய்காந்த் சாவ்டாவிடம் மேற்கொண்ட விசாரணையில் நெய்யில் ரசாயனம் கலந்தது உண்மைதான் என அவர் ஒப்புக்கொண்டார். கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள அவர், யாரும் அறியாத வகையில் நெய்யில் கலப்படம் செய்வதை கற்று அதன்பின்னர் இப்பணியை மேற்கொண்டது தெரியவந்தது. இதற்காக ரசாயனத்தை எங்கிருந்து அவர் வாங்கினார்? இதற்கு வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்ற விவரங்களை அவர் தெரிவிக்க மறைத்துவிட்டார்.
இதனிடையே மீண்டும் அவரை கஸ்டடியில் எடுக்க திருப்பதி கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்ற கோர்ட் அபூர்வா வினய்காந்த் சாவ்டா மற்றும் பொமில் ஜெயின் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் விசாரிக்க நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. அதன்பேரில் நேற்று இருவரையும் ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். சிபிஐ கஸ்டடியில் அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.