திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதலாக 2 மணிநேரம் தரிசனத்துக்கு அனுமதி: அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முதல் 3 நாட்களுக்கு ரூ.300, வி.ஐ.பி. டிக்கெட் உள்ளிட்ட அனைத்து விதமான தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.
இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் இலவச டோக்கன் பெற நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை குலுக்கலுக்காக முன்பதிவு செய்யலாம். 2ம் தேதி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு டிக்கெட் ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்காக தமிழ், தெலுங்கு, கனடா, இந்தி, ஆங்கிலத்தில் பதிவு செய்யும் விதமாக தேவஸ்தான இணையத்தில், மொபைல் செயலியிலும், ஆந்திர மாநில அரசின் 95523 00009 அரசு சேவைக்கான வாட்ஸ் அப் செயலியிலும் குலுக்கலுக்கு பதிவு செய்யலாம்.
தொடர்ந்து 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகளும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும்.
10 நாட்களுக்கு அணைத்து முன்னுரிமை தரிசனங்களும், சிறப்பு முன்னுரிமை தரிசனங்களும், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 10 நாட்களுக்கு 8 லட்சம் டோக்கன், டிக்கெட் வழங்கப்படும். 30ம்தேதி முதல் தரிசனத்திற்கு 18 மணி நேரத்தில் இருந்து 20 மணி நேரம் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


