சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை தேசத்தின் மக்கள் மூவர்ணக் கொடி ஏந்தி கொண்டாடி மகிழ்ந்தார்கள். எனவே வருகிற சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். திரங்கா (மூவர்ணக் கொடி) யாத்திரை வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை வருகிற 10ம் தேதி முதல் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த யாத்திரை மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்கவும், வழிநடத்திடவும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. மாநில அளவிலான குழுவில் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, மகளிர் அணி தலைவர் மதி கவிதா ஸ்ரீகாந்த், ஓபிசி அணி தலைவர் வீர திருநாவுக்கரசு, சேலம் நகர் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பி.சுரேஷ்பாபு, மதுரை நகர் முன்னாள் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், தென்காசி மாவட்ட பார்வையாளர் ஏ.மகாராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.