Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தக் லைஃப் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதால் கமல் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.

இத்திரைப்படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சென்னை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, V. நாராயணன், "தக் லைஃப்" என்ற திரைப்படத்திற்கு 05.06.2025 அன்று வெளியாகும் நாள் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி அளிக்கும்படி அரசைக் கோரியுள்ளார்.

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையரங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன். உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் Raaj Kamal Films International ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு நாள் மட்டும் "தக் லைஃப்" திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிட அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.