இரு வேறு இடத்தில் 3 பேர் அட்டூழியம்; ேபாதையில் இருந்த பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை: புதருக்குள் சடலம் வீச்சு; தெலங்கானாவில் கொடூரம்
ஐதராபாத்: ஐதராபாத்தில் பெண் ஒருவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ராஜேந்திரநகர் பகுதியில், கடந்த 16ம் தேதி புதர் அருகே 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபராபாத் போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை நேற்று கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் விசாரணையில், ‘கடந்த 14ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருந்துள்ளார். அவரை நோட்டமிட்ட 33 வயது நபர், ஆட்டோவில் கடத்திச் சென்று மது மற்றும் பிரியாணி வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், அப்பெண்ணை ஆராம்கர் சந்திப்பில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு அங்கு வந்த 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக தங்கள் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கிஸ்மத்பூர் பாலத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இருவரும் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, தடிகளால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, உடலை புதருக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்’ என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகள் மூன்று பேரையும் வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.