Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழிவாங்க போடப்பட்ட விபரீத திட்டம்; ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்: சிசிடிவியில் சிக்கிய 74 வயது முதியவர் கைது

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் தியோந்தர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி மோகினி பதோரியாவுக்கு, கடந்த 2ம் தேதி பதிவுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், ‘நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால் 500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும், பிரபல கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சந்தீப் சிங் என்பவரின் பெயரில் கடிதம் கையொப்பமிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிபதி அளித்த புகாரின் பேரில், காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை, கடிதம் அனுப்பப்பட்ட தபால் நிலையத்தைக் கண்டறிந்தது. ஆரம்பத்தில் சந்தீப் சிங் மீது சந்தேகம் எழுந்தாலும், தடயவியல் சோதனைகள் மற்றும் கிராம மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தபால் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தேவராஜ் சிங் (74) என்ற முதியவர் கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது. விசாரணையில், தேவராஜ் சிங்குக்கும் சந்தீப் சிங்குக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் இருந்ததும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தீப் தன்னைத் தாக்கியது தொடர்பாக அளித்த புகாரின் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையில் அதிருப்தி அடைந்ததும் தெரியவந்தது.

எனவே, சந்தீப்பை பொய் வழக்கில் சிக்கவைத்து பழிதீர்க்கும் நோக்கில், அவரது பெயரில் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் எழுதியதை தேவராஜ் சிங் ஒப்புக்கொண்டார். வழக்கை உண்மையானது போல் காட்டவே 500 கோடி ரூபாய் போன்ற பெரிய தொகையைக் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, தேவராஜ் சிங் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது இவ்வழக்கின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.