ஆயிரக்கணக்கான மக்கள் தவித்த போது பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதித்தது ஏன்..? ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி
புதுடெல்லி: புதிய பணி நேர கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டதால் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 10வது நாளான நேற்று டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் 220 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதே சமயம் விமான கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்வி விவரம் வருமாறு: பிரச்னை ஏற்பட்டால், அதனை மற்ற விமான நிறுவனங்கள் எப்படி சாதகமாக பயன்படுத்த முடியும்? இங்கு திடீரென பிரச்னை ஏற்பட்டது ஏன் என்பதே கேள்வி? அதனை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? இத்தகைய சூழ்நிலை ஏற்பட அனுமதிக்கப்பட்டது கவலை அளிக்கிறது.
இந்த சூழ்நிலை பயணிகளுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்தது. பயணிகளுக்கு இழப்பீடு வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதிகாரிகள் உதவியற்றவர்களாக இருந்தார்களா? ரூ.5,000க்குக் கிடைத்த டிக்கெட்டின் விலை ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை ஏன் உயர்ந்தது. நெருக்கடி ஏற்பட்டால், மற்ற விமான நிறுவனங்கள் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியும்? டிக்கெட் விலை ரூ.35,000 மற்றும் ரூ.39,000 வரை எப்படி உயர முடியும்? மற்ற விமான நிறுவனங்கள் எப்படி கட்டணத்தை உயர்த்தின? இதற்கு எப்படி அனுமதி கிடைத்தது? இந்த நெருக்கடி ஏன் எழுந்தது, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே கேள்வி?. இவ்வாறு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இண்டிகோ சிஇஓ இன்று நேரில் ஆஜராக டிஜிசிஏ உத்தரவு: இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை சிவில் விமான போக்குவரத்து துறை(டிஜிசிஏ) இயக்குனர் பைஸ் அகமது கித்வாய் அறிவித்தார். இந்த நிலையில், இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பீட்டர் எல்பர்ஸ் இன்று அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விமான விளக்கம் அளிக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.


