Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் பரபரப்பு; முத்தையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில், சொந்த பிரச்னையின் போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை வாங்கச் சென்ற ஓட்டல் உரிமையாளர் தீடிரென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி, முள்ளக்காடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் சுவிசேஷராஜ் (42). ஸ்பிக்நகரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இவருக்கும், இவரது உறவினர்களான மாசானமுத்து, தீபக்ராஜ், பாண்டி, கனி ஆகியோருக்கும் இடையே அடிதடி, தகராறு ஏற்பட்டது. இதில் மாசானமுத்து தரப்பினர், சுவிசேஷராஜை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் மாசானமுத்து தரப்பினர் மீது அடிதடி வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுவிசேஷராஜ் வலியுறுத்தி வந்தார். இதற்கிடையே சுவிசேஷராஜை, மாசானமுத்து தரப்பினர் தாக்கிய சம்பவத்தில் அவரது செல்போனை உடைத்ததோடு, பைக்கையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு போலீசார் தனி வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த 2 சம்பவங்களையும் குறிப்பிட்டு தனி வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறுவதற்காக நேற்றிரவு 10 மணிக்கு சுவிசேஷராஜ், முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் மாசானமுத்து தரப்பினர் மீது தனது பைக்கையும், செல்போனையும் உடைத்து சேதப்படுத்தியதற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சம்பவங்கள் தான் முதல் தகவல் அறிக்கையில் வருகிறதே என்று கூறியுள்ளார். ஆனாலும் தனி வழக்கு என்பதில் சுவிசேஷராஜ் உறுதியாக இருக்கவே, அதற்கு நாளை (இன்று) காலை ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளியுங்கள் என்று இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சுவிசேஷராஜ், முத்தையாபுரம் போலீஸ் நிலைய வாசல் முன்பு தான் ஏற்கெனவே கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு, ஸ்டேஷனுக்குள் உடலில் தீ கொழுந்து விட்டு எரிய நடந்தே சென்றார். இதைப் பார்த்து பதறிய போலீசார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் மயங்கிச் சரிந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுவிசேஷராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையம் முன்பு ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், முள்ளக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.