ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் திருவான்மியூர்-உத்தண்டி வரை 4 வழித்தட உயர்மட்ட சாலை: தமிழக அரசு டெண்டர் கோரியது
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். அதன்படி, 14.2 கி.மீ வரை நான்கு வழித்தட சாலையாக அமைப்பதற்கு ரூ.2,100 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்காக ரூ.52 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டன. தற்போது இத்திட்டத்திற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள உள்ளோம். திருவான்மியூர் - உத்தண்டி சாலை என்பது எப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகின்றன. குறிப்பாக, 45 நிமிடங்கள் வரை உத்தண்டியை கடக்க நேரம் செலவாகின்றன. ஆனால் உயர்மட்ட சாலை அமைக்கும்பட்சத்தில் 20 நிமிடங்களிலேயே கடந்துவிட முடியும். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தேவையில்லை. ஏனெனில் ஈசிஆர் ஏற்கனவே 30 மீட்டர் அகலமாக விரிவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.