Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்போரூர் பேரூராட்சியில் சாலையோரம் குவியும் குப்பை அதிகரிக்கும் நோய் பாதிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் காலை நேரங்களில் வீடு வீடாக சென்று குப்பைகள் பெறப்படுவது ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் இரவு நேரங்களில் திருப்போரூர் பேருந்து நிலையம், ஓஎம்ஆர் சாலை, நான்கு மாட வீதிகளில் குப்பைகளை அகற்றும் பணியும் தனியே நடந்து வருகிறது. எனினும், இங்கு வீட்டு குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் முறையாக கொடுக்காமல், ஆங்காங்கே சாலையோரங்களில் பலரும் குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதுமட்டுமின்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் குப்பைகளை மூட்டையாக கட்டி, வாகனங்களில் கொண்டு வந்து சாலையோரங்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் திருப்போரூர் பேரூராட்சியின் பல்வேறு பகுதி சாலையோரங்களில் ஏராளமான குப்பைக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.

இக்குப்பைக் கழிவுகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி மூலம் அதிகளவு நோய்தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக தெற்கு மாட வீதி, அரசு மருத்துவமனை, இள்ளலூர் சாலை, வீராணம் சாலை போன்ற இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைக் கழிவுகளை நாய், பன்றிகள் கிளறுவதால் நோய்தொற்று பரவல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை தவிர்க்க, இப்பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை முறையாக அகற்றி சீரமைத்து, தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.