Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்போரூர் அருகே அரிவாளுடன் வலம் வந்து வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்ட ரவுடி கைது

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் நெல்லிக்குப்பம் ஊராட்சி உள்ளது. இங்கு நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. நெல்லிக்குப்பம் ஊராட்சியில் தனியார் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கலைக்கல்லூரி உள்ளன. ஓஎம்ஆர் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றுக்கு இடையே இந்த ஊராட்சி உள்ளதால் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

சிறு ஓட்டல்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரமாக மாற்றம் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, சில ரவுடிகள் ஒன்று ேசர்ந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீதிகளில் சுற்றித் திரிவதாகவும், டீக்கடைகள், ஓட்டல்களில் பணம் கொடுக்காமல் பொருள்களை எடுத்து செல்வதாகவும், வாரந்தோறும் மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நடத்தும் டீக்கடைகளை குறிவைத்து ரவுடிகள் இச்செயலில் ஈடுபடுவதாகவும், சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் தர மறுத்து கண்ணாடி பாட்டில்களை தூக்கிப்போட்டு உடைத்து அரிவாளை காட்டி மிரட்டி செல்வதாகவும் வியாபாரிகள் சங்கத்தினர் கூறினர். அண்மையில் கொட்டமேடு பகுதியில் அரிவாளால் ஓடஓட வெட்டிய நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சேது (எ)வாலிபரை திருப்போரூர் போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபர் தற்போது வெளியே வந்து நானும் ரவுடிதான் என்ற போர்வையில் வீடியோவை காட்டி நெல்லிக்குப்பம் வியாபாரிகளை மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சேதுவும் அவனது நண்பர்களும் வியாபாரிகளை மிரட்டி டீக்கடை பொருட்களை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், காயார் போலீஸ் எஸ்ஐ ரமேஷ் ஆகியோர் நெல்லிக்குப்பத்தில் அரிவாளுடன் வலம் வந்து மாமூல் கேட்ட சேது என்ற பில்லா (21) என்பவரை நேற்று கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.