திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் பயங்கரம் வாலிபர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
திருமங்கலம்: திருமங்கலம் அருகே வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைதாயினர்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தென்பழஞ்சியை சேர்ந்தவர் முத்துமுருகன் (26). கம்பி கட்டும் தொழிலாளி. மனைவி தேவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், இதே கிராமத்ைத சேர்ந்த கண்ணன் (24) என்பவருக்கும் கடந்த ஓராண்டாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் தேவி, குழந்தைகளுடன் அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் நடைபெற்ற உறவினர் விசேஷத்திற்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு கிளம்பிச் சென்றார். வேலை முடிந்து திரும்பிய முத்துமுருகன், வீடு பூட்டி இருந்ததால் முன்புற படிக்கட்டில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த கண்ணன் உட்பட சிலர், தூங்கிக் கொண்டிருந்த முத்துமுருகன் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் முத்துமுருகனுக்கு தோள்பட்டை, முதுகு, தொடை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க முத்துமுருகன் உடலில் எரிந்துக் கொண்டிருந்த தீயுடன் துரத்திச் சென்றார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, முத்துமுருகனின் மேல் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் கண்ணன் உள்ளிட்ட மூவரும் தப்பியோடி விட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார், முத்துமுருகனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கண்ணன் உள்ளிட்டோரை தேடிவந்தனர்.
மாவட்ட எஸ்பி உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிப்படையினர் நேற்று அதிகாலை கண்ணன் மற்றும் அவரது உறவினர்களான மதுரை திடீர் நகரை சேர்ந்த 3 சிறுவர்களை தனக்கன்குளம்
கண்மாய் அருகே கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக தென்பழஞ்சி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.