Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேதமடைந்து கம்பிகள் தெரியும் அவலம்: சோழன்திட்டை அணையின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதி வழியாக ஓடக்கூடிய பெரிய ஆறுகளில் ஒன்று பழையாறு. இந்த ஆற்றின் குறுக்கே குமரி அணை, சோழன்திட்டை அணை உள்பட பல தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதுடன், குளங்களை சுற்றியுள்ள வயல்கள் பாசன வசதியும் பெற்று வருகிறது. இந்த தடுப்பணைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் பல சிதலம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பெரும் வெள்ளம் வரும்போது பெரிய பொருட்சேதத்தை உருவாக்கி செல்கிறது. குமரி அணையில் உள்ள கற்கள் பெயர்ந்து புல்கள் முளைத்துள்ளது. இதுபோல் சோழன்திட்டை அணையில் உள்ள ஷட்டர்கள் உடைந்து காணப்பட்டது. இதனை சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் சோழன்திட்டை அணையின் மேல்பகுதியில் உள்ள தடுப்புசுவர்கள் உடைந்து காணப்படுகிறது.

குறிப்பாக சோழன் திட்டை அணையின் மேல் பகுதியில் நின்று பலர் பழையாற்றி மீன்பிடிப்பது வழக்கம். மீன்பிடிப்பவர்கள், அந்த வழியாக செல்பவர்கள் தடுப்புசுவர் உடைந்து ஆற்றில் விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் விவசாயத்திற்கு முக்கிய பங்காற்றும் தடுப்பணைகளை பராமரிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் புத்தன்அணையில் இருந்து பழையாற்று வழியாக மணக்குடி பகுதியில் கடலில் கலக்கிறது. உபரி தண்ணீராக கடலில் செல்லும் இந்த தண்ணீரை பயன்படுத்த பல்வேறு இடங்களில் தடுப்புசுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் உறைகிணறுகளும் ஆற்றின் உள்ளே போடப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பார்வையுடன் அமைக்கப்படும் தடுப்பணைகள் சேதமடையாமல் பார்க்க வேண்டும். அப்படி என்றால் தான் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அதிகாரிகள் சோழன்திட்டை அணையில் தடுப்புசுவரில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.