தாயுமானவர் திட்டத்தில் நவ. 3 முதல் 6 வரை முதியோர் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்
சென்னை: தாயுமானவர் திட்டத்தில் நவம்பர் 3 முதல் 6 வரை முதியோர் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளது. இது குறித்து, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நவம்பர் 2025 திங்களுக்கு 03.11.2025 முதல் 06.11.2025 வரை சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள்.
அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
  
  
  
   
