மதுரை: தவெக தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார் என ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்; மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம்.
ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணாவையும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார். அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தவெக தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார். கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு என்றும் கூறியுள்ளார்.