கோயம்பேடு பகுதியில் யூடியூப் சேனல் பேட்டியின்போது முதல்வருக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி அதிரடி கைது: என்னை விட்டுவிடுங்கள் என கதறியதால் பரபரப்பு
அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியில் யூடியூப் சேனல் பேட்டியின்போது முதல்வருக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நேற்று முன்தினம் நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படம் வெளியானது. அப்போது, படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பொதுமக்களிடம் யூடியூப் சேனல் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். படம் பற்றி பேசிய மக்கள், கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனதற்கு வருத்தம் தெரிவித்தனர். திடீரென அங்கு வந்த வாலிபர் ஒருவர், மைக்கை பிடிங்கி தவெக மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பும் முதல்வருக்கு மிரட்டல் விடுவித்து, ‘நான் தவெக நிர்வாகி, தீவிர விஜய் ரசிகர், எனது வீடு மதுரவாயல் உள்ளது, முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்’ என நடிகர் விஜய் கதை வசனம் பேசியதுபோல் ஆவேசமாக பேசினார்.
அப்போது, மைக்கை பிடுங்கிய யூடியூப் நிருபர்கள், எதற்காக முதல்வர் பற்றி அவதூறாக பேசுகிறீர்கள்’ என கேள்வி எழுப்பியபோது, அந்த வாலிபர், யூடியூப் சேனல் நிருபர்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த காட்சி அனைத்தையும் ஆதாரமாக வைத்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு சவால் விட்ட தவெக நிர்வாகியை கைது செய்வதற்கு கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், தீவிரமாக தேடியபோது, தவெக நிர்வாகி போலீசாருக்கு பயந்து வீட்டிற்குகூட வராமல் தலைமறைவானார். இதையடுத்து அவரது செல்போன் நம்பரை கண்டுபிடித்து டவர் மூலம் தொடர்ந்து கண்காணித்தபோது, சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருப்பதை காட்டியது.
அதன்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த தவெக நிர்வாகியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர், சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகரை சேர்ந்த தவெக உறுப்பினர் கோகுல் (29) என்பதும், அதே பகுதியில் உணவு டெலிவரி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசாரிடம் அவர் கூறியதாவது: நான் ஒரு சாதாரண ஆள். எனது குடும்ப கஷ்டத்திற்காக உணவு டெலிவரி வேலை செய்து வருகிறேன். நடிகர் விஜய், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என முதல்வருக்கு சவால் விட்டதுபோல் ஆர்வகோளாறால் கதை வசனம் பேசுவதுபோல் முதல்வருக்கு மிரட்டல் விடுவித்தது மிகப்பெரிய தவறு. இதுபோல் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என போலீசாருக்கு சவால்விட்டதும் மிகப்பெரிய தவறுதான். இனி இதுபோல் தவறு செய்யமாட்டேன்.
என்னை விட்டுவிடுங்கள் என கதறியுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட கோகுல் மீது ஆபாசமாக பேசுதல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வருக்கு மிரட்டல் விடுவித்து, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என போலீசாருக்கு சவால்விட்ட தவெக உறுப்பினர் நான் செய்தது தவறுதான் என போலீசாரிடம் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.