வீட்டில் வைத்து தாலி கட்ட ஏற்பாடு 18 வயது மருமகனை திருமணம் செய்ய முயன்ற 40 வயது மாமியார்: தடுக்க முயன்ற மகளுக்கு அடி, உதை
திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவனும், 15 வயது சிறுமியும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். சிறுமியின் தந்தை உயிரிழந்ததால், 40 வயதுள்ள அவரது தாயுடன் தம்பதிகள் வசித்து வந்தனர். இதற்கிடையில் மருமகனுக்கும், மாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தாயும், கணவரும் திருமணம் செய்து கொள்ள முயன்றார்களாம். கணவர் தனது தாயின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்த சிறுமி அதிர்ச்சியடைந்து தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயும், அவரது கணவர் இருவரும் சேர்ந்து சிறுமியை சரமாரியாக தாக்கி, உதைத்தனர்.
அப்போது தாய் தலையில் பலமாக அடித்ததால் சிறுமி வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர செயலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாமியார் மற்றும் மருமகனை தாக்கி இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.