Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தாய்லாந்து-கம்போடியா போரை ஒரு போன் அழைப்பில் நிறுத்துவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

நியூயார்க்: தாய்லாந்து-கம்போடியா இடையேயான மோதலை ஒரு போன் அழைப்பில் போரை நிறுத்துவேன் என டிரம்ப் கூறினார். கம்போடியா-தாய்லாந்து இடையே 1907ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இரு நாடுகளும் நீண்டகாலமாக கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை கொண்டிருந்தாலும், நில எல்லை சர்ச்சை, தீவிர தேசியவாதம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் காரணமாக பதற்றங்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், எல்லையில் அமைந்துள்ள 11ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோயில் தங்களுக்கு சொந்தமானது என கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இது, கடந்த ஜூலையில் முற்றியது. இரு நாட்டு வீரர்களும் மோதி கொண்டனர். சுமார் 5 நாட்கள் நடந்த இந்த போரில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார்.

அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி, தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாக கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8ம்தேதி மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர். புதிய எல்லை மோதல்கள் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கம்போடியா அதிபர் ஹான் மானெட் வான்வழி தாக்குதல் நடத்தி தாய்லாந்தை தரைமட்டமாக்குவேன் என்று நேற்று சூளுரைத்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பென்சில்வேனியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்றார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து பிரச்னை குறித்து கேட்டபோது, ‘ஒருபோன் அழைப்பில் பிரச்னையை தீர்த்து விடுவேன்.

கடந்த 10 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் போரை நிறுத்திவிட்டேன். இதெல்லாம் எனக்கு சாதாரண விஷயம். நம்மிடம் உள்ள அதீத சக்தியை (வரிவிதிப்பு) பயன்படுத்தி எதை வேண்டுமானலும் சாதித்து விடுவேன்’ என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதலைதான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக நேற்றோடு 70வது முறையாக டிரம்ப் கூறியுள்ளார். இருநாடுகள் இடையேயான பதற்றத்தை நிறுத்தியதில் அமெரிக்கா உள்ளிட்ட 3ம் தரப்பினர் தலையீட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.