Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க அரசின் 50% வரிவிதிப்பால் ஜவுளி துறைக்கு பாதிப்பு; எந்த வித கொள்கையையும் ஒன்றிய அரசு வகுக்காததால் தொழிலாளர்கள் தவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, நாட்டின் ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு ரத்தினக் கற்கள், ஆபரணங்கள், ஆடைகள், பாதணிகள், மரச்சாமான்கள், தொழில் துறை ரசாயனங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 27ம் தேதியிலிருந்து இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க நிர்வாகம் 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதன் காரணமாக, 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறையின் போட்டித் தன்மை, வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும் கூறப்படுகிறது.

ஜவுளித் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வரி விதிப்பின் விளைவாக ஜவுளித் துறைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை சமாளிக்க மானியம், வரி சலுகைகள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது குறித்த கொள்கை எதையும் ஒன்றிய அரசு இதுவரை வகுக்காதது தொழிலதிபர்கள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அமெரிக்க அரசின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், நாட்டின் ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஈடுகட்டும் வகையிலும், மானியம், வரி விலக்குச் சலுகைகள், ஊக்கத் தொகை, பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கிய ஓர் உதவித் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.